left shape

ஈழத்தமிழர் தேசத்தின் எடுத்துரைப்புக்கான நூலாக்கப் பெருந்திட்டம்

ஈழத்தமிழர் தேசத்தின் மீதான இன அழிப்பையும் அதற்கெதிரான விடுதலைப் போராட்டத்தையும் இளைய தலைமுறைக்கும் உலக மானுடத்துக்கும் எடுத்துரைப்பதற்கான அடிப்படைகளை வகுத்தல்.
  • cover
  • author முன்னெடுப்பு:
    தமிழ்நெற்
    (TamilNet)
bottom shape

இதுவரை சேர்ந்துள்ள நிதி விபரம்

USD 7364 25 நபர்கள், 41 முறை பங்களித்துள்ளனர்
USD 40000 இல் 18.41% சேர்ந்துள்ளது


இவ் இணையத்தளத்தின் ஊடாக நிதி வழங்குவோரின் வங்கிப் பற்றட்டை விபரங்கள் எதுவும் தமிழ்நெற்றுக்குக் கிடைக்க மாட்டா. நிதிப்பரிவர்த்தனையை மேற்கொள்வது அமெரிக்காவையும் அயர்லாந்தையும் மையமாகக் கொண்டியங்கும் ஸ்ரைப் (Stripe) எனும் பிரபலமான நிறுவனமாகும். பங்களிப்பு வைப்பான பின்னர், தங்களின் பெயரும், மின்னஞ்சல் முகவரியும், நல்கிய தொகையும் மட்டுமே எமக்கு ஸ்ரைப் நிறுவனத்தால் தெரியப்படுத்தப்படும். தங்களுக்கும் ஒரு மின்னஞ்சல் தானியக்கமாக அனுப்பப்பட்டிருக்கும் (Spam அடைவையும் பார்க்க).

பற்றட்டை ஊடாக ஸ்ரைப் மூலம் நேரடியாகப் பங்களிப்பை வைப்பில் இடுவதற்கு தயக்கமிருப்பின், மாற்றீட்டாக, PayPal ஊடாகவும் நிதியை நல்கலாம். அல்லது, நோர்வேயில் இயங்கும் தமிழ்நெற் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கெண்ணுக்கு தங்கள் வங்கியூடாகவும் நேரடியான பணக் கைமாற்றைச் செய்யலாம்.

நோர்வேயில் இருப்பவர்கள் தமிழ்நெற்றுக்குப் பங்களிப்பதற்கு இலகுவாக பின்வரும் VIPPS இலக்கத்தைப் பயன்படுத்தலாம்: TamilNet #716585

Stripe மூலம் வழங்கப்படும் நிதி விபரம் உடனுக்குடன் இங்கு காட்டப்படும். Bank, PayPal மற்றும் VIPPS ஊடாக அனுப்பிவைக்கப்படும் நிதி எமக்குக் கிடைத்து 24 மணி நேரத்திற்குள் இந்த இணையத்தளத்தின் தொகைக் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும்.

குறைந்தபட்ச உத்தேச நிதிச் செலவு

குறைந்தது நூறு தரவு-வரைகலைப்படங்களைப் (infographics) புனைவதற்கு ஒன்றுக்கு இருநூறு அமெரிக்க டொலர்கள் என்ற அடிப்படையில் இருபதாயிரம் டொலர்கள் வெளி நிபுணர்களுக்கான செலவாகும்.

இதைப்போல, வரைபடங்களுக்கு (maps) ஐயாயிரம் டொலர்கள் தேவைப்படும். புள்ளிவிபர ஒப்பீட்டு ஆய்வுகளுக்கும் குறைந்தது ஐயாயிரம் டொலர்கள் தேவையாகும்.

ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களின் வடிவமைப்புப் பணிக்குக் குறைந்தது மூவாயிரம் டொலர்கள் தேவைப்படும்.

மொழிபெயர்ப்பு வேலைக்கும் இதைப் போல மூவாயிரம் டொலர்கள் தேவைப்படும்.

அதுமட்டுமல்ல, இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான வரலாற்றியல் (historiography) அணுகுமுறையை வகுப்பதற்கு மூவாயிரம் டொலர்கள் வரை செலவிடவேண்டியிருக்கும்.

எனவே நாற்பதாயிரம் டொலர்கள் இந்தப் பெருந்திட்டத்துக்குத் தவிர்க்கமுடியாத அடிப்படை நிதித் தேவையாகின்றது.

இதைத் திரட்டும் பணியை உடனடியாக மக்கள் திரட்சி நிதியூட்ட முறை (crowdfunding) ஊடாக ஆரம்பித்திருக்கிறோம்.

நூற்பதிவுக்கான செலவு இரண்டாம் பட்சமானது. அதற்குரிய வரவு செலவுத் திட்டம் நூல்களை விநியோகிப்போருடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டபின்னர் மேற்கொள்ளப்படும். இதற்குப் பொதுமக்களின் நிதிப்பங்களிப்புக்கான தேவை இருக்காது என்று நாம் கருதுகிறோம்.

ஆகவே, ஆய்வுக்குரிய அடிப்படை வேலைகளுக்கான நாற்பதாயிரம் அமெரிக்க டொலர்களை நற்கொடை எண்ணமுள்ளவர்களிடம் உடனடியாகச் சேகரிக்க விழைகிறோம்.

கையாளப்படவுள்ள நவீன நுட்பங்கள் சில

நீண்ட நெடிய எழுத்துப் பனுவல்களாகவும் கனதியான வாசிப்புக்குரியவையாகவும் அன்றி, சிக்கலான விடயதானங்களைக் கூட கட்புலனூடாக மூளைக்குப் பளிச்சென்று புரியவைக்கும் நுட்பங்கள், நூலில் வெளிப்படும் தரவுகளைச் சித்தரிப்பதற்கும், அவற்றை ஒப்பிட்டு விளங்கிக்கொள்வதற்குமான நவீன உத்திகளாகும். அவற்றிற் சில பின்வருமாறு.

மூலங்களின் மீள்வாசிப்பு

Re-reading the main sources of information

வெள்ளை ஆவணங்கள்

White papers

மன வரைபடங்கள்

Mind maps

தரவுகள் காட்சிப்படல்

Data visualisation

புத்தாக்கத் தரவு வரைகலை

Creative infographics

கண்கவர் வரைபடங்கள்

Refined maps

ஒப்பீட்டுப் புள்ளிவிபரங்கள்

Statistical comparisons

தேடு-பொறி

Search Engine for Eelam related content

செயற்கை-அறிதிறனும் கருவி-தன்கற்றலும்

Artificial Inteliigence & Machine Learning for Eelam related content

நூலாக்கத்தின் கனதி

எந்தவித ஒளிவு மறைவோ, சுயதணிக்கையோ, அச்சம் நாணமோ, காய்தல் உவத்தலோ இன்றி, ஈழத்தமிழரின் விடுதலை வேணவாவின் நியாயப்பாடுகளையும் அவர் தம் போராட்டத்தையும், அதன் தற்போதைய நிலையையும் உலக மாந்தருக்கு எடுத்தியம்ப அடித்தளமிடல்.
பொருத்தமான வரலாற்றியற் பார்வையோடு, தகுந்த ஆய்வுகளை முன்னெடுத்து, வரலாற்றுப் பாடநூல்களை மட்டுமல்ல, தமிழ் மொழியிலும் பிறமொழிகளிலும் ஈழத்தமிழர்களின் காலனித்துவ, பிற்காலனித்துவ வரலாற்று நிகழ்வுகள், சமகாலச் சம்பவங்கள் நூலாக்கம் பெறும்.

எதிர்பார்ப்புடனான எதிர்காலத்துக்குரிய எதிர்வுகூறல்களுக்கு உதவக்கூடிய கோட்பாடுகளும் சிந்தனைகளும் தகவல்களும் பின்முள்ளிவாய்க்காற் காலத்திற்குரிய வகையில் மீள்வாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டு நூலாக்கப்படும்.

படைப்பாளிகள் தொடக்கம் அறிவுழைப்பினர் வரை பயன்பெறும் வகையில் கோட்பாடுகளும், சிந்தனைகளும், தரவுகளும் முன்வைக்கப்படும்.

தமிழ் மொழியில் மட்டுமல்ல, ஆங்கிலம் மற்றும் அனைத்துலக மொழிகளில் வெளியிடப்படும் வகையில் மூலத் தரவுகளும் வரைகலை வெளிப்பாடுகளும் வரைபடங்களும் தயாரிக்கப்படும்.

பெருந்திட்ட நூல்களின் பயனாளர்கள்

நிதி சேகரிப்பின் பின்னர், வரலாற்றியல் அணுகுமுறை வகுக்கப்பட்டு, திட்டமிடல் பூர்த்தியானதும் எத்தனை நூல்கள் வெளியிடப்படவுள்ளன என்பது வரையறுக்கப்படும்.

இளந்தலைமுறை ஈழத்தமிழர்கள்

கருத்துச் சுதந்திரத்துடன் பல புலங்களில் வாழும் ஈழத்தமிழ் இளந்தலைமுறையினர் தமது பூர்வீகத்தையும், அடையாளத்தையும், தமது தேசத்தின் மீதான அடக்குமுறையையும், இன அழிப்பையும், விடுதலைப் போராட்டத்தையும் ஆர்வத்தோடு அறிந்துகொள்ளும் வகையில் நூல்கள் தயாரிக்கப்படும்.

மாணவர்களும் ஆசிரியர்களும்

பாடசாலை மாணாக்கரில் இருந்து பல்கலைக்கழகத்தினர் வரை தமது கட்டுரைகளுக்கும் காட்சிப்படுத்தல்களுக்கும் குறிப்பெடுக்கவும், உசாத்துணையாகக் கொள்ளத்தக்கதாகவும், கற்பிப்போர் எடுத்தாளும் வகையிலும் நூலாக்கம் அமையும்.

அறிவுழைப்பினரும் ஊடகத்துறையினரும்

செய்திகள் தொடக்கம் ஆய்வுக் கட்டுரைகள் வரை எழுத்துப் பணியில் ஈடுபடுவோர் புள்ளிவிபரங்களையும், ஒப்பீட்டுத் தரவுகளையும், சர்வதேசப் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி பற்றி, ஈழத்தமிழர் கோணத்தில் இருந்து விடயங்களை அணுகும் வகையில் தரவுகள் அமைந்திருக்கும்.

படைப்பாளிகளும் செயற்பாட்டாளர்களும்

மேடை நிகழ்வுகளில் இருந்து திரையுலகு வரை பல்துறை சார்ந்த படைப்பாளிகளும் புத்தாக்க உணர்வு பெறும் வகையில் தரவுகளும் விடயதானங்களும் அமைந்திருக்கும். அடையாளம் தொடக்கம், தேசம் மற்றும் நாகரிகம் வரை அவர்தம் சிந்தனை வீச்சுப் பெறவும், உணர்வுக்கு முன்னே தர்க்கீகமும் அரசியல் விழிப்பும் அணிவகுக்கும் வகையில் அறிவூட்டல் இடம்பெற்றிருக்கும். எதிர்காலம் குறித்த நம்பிக்கை பிறக்கவேண்டும். தோல்வி மன நினையில் இருந்து மீளுவர். செயற்பாட்டாளர்கள் குழப்பங்களுக்கு ஆளாகாமல் தெளிவு பெற்றுத் தமது செய்ற்பாட்டைக் குவியப்படுத்தும் வகையில் சிந்திக்கத் தலைப்படுவர்.

உலக சமுதாயத்தினர்

ஈழத் தமிழர் என்றால் யார், அவர்களின் மாண்பு என்ன, அடக்குமுறைகளை எதிர்கொண்ட அவர்கள் எவ்வாறெல்லாம் போராடிவருகிறார்கள். அவர்களோடு ஒப்புரவை எப்படி மேற்கொள்வது என்ற சிந்தனையை தமிழர் அல்லாதோர் உள்ளுணரும் வண்ணம் தரவுகள் தெள்ளத் தெளிவாக ஒப்பீட்டு முறையில் எடுத்துரைக்கப்படும்.

நிதி பங்களிக்க...

ஈழத்தமிழர் தேசத்துக்கான நூலாக்கப் பெருந்திட்டம்

ஈழத்தமிழர் தேசத்தின் மீதான இன அழிப்பையும் அதற்கெதிரான விடுதலைப் போராட்டத்தையும் இளைய தலைமுறைக்கும் உலக மானுடத்துக்கும் எடுத்துரைப்பதற்கான நூலாக்கப் பெருந்திட்டம்

தேவையின் பின்னணி
இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்கப் பொருத்தமான வரலாற்றியற் பார்வையோடு, தகுந்த ஆய்வுகளை முன்னெடுத்து, வரலாற்றுப் பாடநூல்களை மட்டுமல்ல, தமிழ் மொழியிலும் பிறமொழிகளிலும் ஈழத்தமிழர்களின் காலனித்துவ, பிற்காலனித்துவ வரலாற்று நிகழ்வுகள், சமகாலச் சம்பவங்கள் நூலாக்கம் பெறவேண்டும்.

அது மட்டுமன்றி, எதிர்பார்ப்புடனான எதிர்காலத்துக்குரிய எதிர்வுகூறல்களுக்கு உதவக்கூடிய கோட்பாடுகளும் சிந்தனைகளும் தகவல்களும் பின்முள்ளிவாய்க்காற் காலத்திற்குரிய வகையில் மீள்வாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டு நூலாக்கம் நடைபெற வேண்டும்.

இளைய தலைமுறை மட்டுமல்ல வெளியுலகும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையில் நூலாக்கத்தின் போது உருவாகும் வெளிப்படுத்தல்கள் எல்லையற்றுப் பயன்படவேண்டும்.

இதன் அவசியத்தைப் புலம் பெயர் ஈழத்தமிழர் சமுதாயம் தற்போது உணர்ந்திருக்கிறது.

இளைய தலைமுறைக்கும் வெளியுலகுக்கும் மட்டுமல்ல, எமது படைப்பாளிகள் தொடக்கம் அறிவுழைப்பினர் வரை இந்தத் தேவை ஆழமாக உணரப்பட்டிருக்கிறது.

சில பலனுள்ள முயற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் அவை மிகமுக்கியமான பின்முள்ளிவாய்க்காற் காலத்தைத் தவறவிட்டுள்ளன. அதுமட்டுமன்றி, நீண்ட நூல்களாக வெளிவந்திருக்கும் அவை நவீன உத்திகளைப் பயன்படுத்தாமையினால் எடுத்துரைப்புக்குரிய கனதியைத் தவறவிட்டுள்ளன.

ஆகவே, நவீன யுகத்துக்குரிய தரவுவரைகலையோடு, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ஒப்பீடுகள், புள்ளிவிபரங்கள் மற்றும் புதிதாய் ஆக்கப்பட்ட வரைபடங்களோடு, எந்தவித ஒளிவு மறைவோ, சுயதணிக்கைகளோ, அச்சம் நாணமோ, காய்தல் உவத்தலோ இன்றி, ஈழத்தமிழரின் விடுதலை வேணவாவின் நியாயப்பாடுகளையும் அவர் தம் போராட்டத்தையும் அதன் தற்போதைய நிலையையும் உலக மாந்தருக்கு எடுத்தியம்ப அடித்தளமிடும் நூலாக்கப் பெருந்திட்டம் ஒன்று ஈழத்தமிழர் தேசத்திற்குத் தேவைப்படுகிறது.

இந்தப் பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற வினா இனிமேலும் தொக்கு நிக்கும் கேள்வியாகத் தொடரப்போவதில்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேசம் உற்றுநோக்கப் பயன்பட்ட ஆங்கில இணைய ஊடகமான தமிழ்நெற் இதற்கான பெருந்திட்டத்தைத் தயாரித்து முன்னெடுக்க முடிவெடுத்துக் களம் இறங்கியுள்ளது.

ஏற்கனவே, கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, தமிழ்நெற் ஆசிரியபீடம் இணைந்து இயங்கிவரும் செயற்படுதளமான தமிழ் வாதாடு தளத்தின் (Tamil Advocacy platform / tamiladvocacy.org) ஊடாக தமிழின அழிப்புக்கான சர்வதேச நீதியை நிறுவுவதற்கான தரவலக (database) மற்றும் தரவுத்தொடர்பியற் (data correlation) திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது.

தற்போது இத்திட்டம் துடிமத் தளமாக தொழில்நுட்பரீதியாகத் தயாரிக்கப்படும் (information system) ஆரம்பநிலைக்கு முன்னேறியுள்ளது. இத்திட்டமிடலின்போது இன அழிப்பை நிறுவுதற்கான தரவுகளும் நியாயப்பாடுகளும் எவ்வாறு தொடர்புபடுத்தப்படவேண்டும் என்பது பற்றிய ஒரு தெளிவான பார்வை எம்மிடம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பார்வையோடும், போராட்டத்தின் சர்வதேச ஊடகமாயிருந்த பின்னணியோடும், இளையோருக்கான பட்டறைகளை நடாத்திவந்த பட்டறிவோடும் நூலாக்கப் பெருந்திட்டம் ஆக்கப்படுவது பொருத்தமானது மட்டுமல்ல, அவசியத் தேவையும் கூட என்பது பலராலும் உணர்ந்து முன்வைக்கப்படுகின்ற கருத்தாக உள்ளது.

ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்தும், வட அமெரிக்காவில் இருந்தும், குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்தத் தேவையை எம்மிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நவீனமயப்படுத்தப்பட்ட நூலாக்க வேலைத்திட்டம் ஒன்று குறித்த ஈடுபாடு 1990 களின் நடுப்பகுதியில் இருந்தே தமிழ்நெற் ஆசிரியபீடத்துக்கு இருந்துவந்திருக்கிறது. தமிழ்நெற் இணையத்தள ஆரம்பத்திலேயே ‘ஈழத்தமிழர் தேசத்தின் கதை’ என்ற ஒரு வேலைத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அது அப்போதைய இளந்தலைமுறை எழுத்தாளர் ஒருவரால் தொகுக்கப்பட்டது. எனினும், குறித்த வேலைத் திட்டத்துக்குள் முழுமூச்சுடன் இறங்கித் தொழிற்படுவது தொடர்பான தயக்கம் எமக்கு ஏற்பட்டது. பொருத்தமான வளம் இன்மை மட்டுமல்ல, செய்திநிறுவனம் ஒன்றை உருவாக்குதலில் எமது அனைத்து வளங்களையும் குவியப்படுத்தி ஒன்றுதிரட்டவேண்டியிருந்தது.

தற்போது, பொதுமக்கள் மத்தியிலும் ஊடகத் தேவைக்காகத் தொடர்ந்தும் நிதியுதவி வழங்கும் மனப்பாங்கு, குறிப்பாக 2009 இற்குப் பின்னர், அருகிவருகிறது.

எமது வேலைத்திட்டங்கள் மற்றும் நிதியூட்டம் குறித்த அணுகுமுறைகள் மீதான மீள்பரிசீலனை மற்றும் சுயவிமர்சனம், 2018 தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு, அதன் விளைவாகத் தற்போது நூலாக்க முயற்சிகளில் ஈடுபடும் நிலைக்கு வந்திருக்கிறோம்.


நூலாக்கப் பெருந்திட்டம்
நூலாக்கப் பெருந்திட்டம் ஒன்று வேலைத்திட்டமாக மலரும் காலம் வந்துவிட்ட சூழ்நிலையில், எமது தேசத்தின் பல தளங்களிலுமான அறிவுப் பரப்பினை மீண்டும் அணுகி புள்ளிவிபரங்களையும் தரவு மீள்வாசிப்பையும் ஆய்வு முறைகளூடாக மேற்கொள்ளவேண்டியிருக்கும்.

அதற்கு முன்னதாக, பொருத்தமான வரலாற்றியல் அணுகுமுறை ஒன்று வகுக்கப்பட்டாகவேண்டும். வேலைத்திட்டம் தகுந்த முறையில் ஒருங்கிணைக்கப்படவேண்டும். இறுதியில் அனைத்துத் தரவுகளும் எழுத்துருவாக்கத்துக்கும் வரைகலை அமைப்புக்கும் உள்ளாக்கப்பட்டு, நூலாக்கங்கள் உரிய மொழிநடையில் சென்றடையவேண்டிய வாசிப்பு இலக்குகளுக்கு உரிய முறையில் எடுத்து இயம்பப்படவேண்டும்.

எனவே, இந்த வேலைத்திட்டத்துக்கான நிதியூட்டத் தேவையைப் பொருத்தமாகத் திட்டமிடுவதே முதலில் அவசியமாகிறது. இதற்கான அறிவிப்பையே தற்போது மேற்கொள்கிறோம்.

அறிவு வளங்களை ஒருங்கிணைத்துச் செயற்படும் ஆற்றல் எம்மிடம் இருக்கிறது. ஆனால், இப் பெருந்திட்டத்திற்குத் தேவையான நிதிவளம் எம்மிடம் இல்லை. இதை எந்த ஒரு அமைப்பிலோ, அணிகளிலோ அல்லது ஒரு சில நலன்விரும்பிகளின் நிதி உதவியில் மாத்திரமோ தங்கியிருந்தவாறு முன்னெடுப்பது இயலாது. சுயாதீனமான முறையில், ஆனால் அனைவரின் பங்கேற்போடு, இப் பெருந்திட்டம் செயற்படுத்தப்படவேண்டும் என்பதே எமது விருப்பு.

அதேவேளை, உருவாகும் நூலை, அல்லது நூல்களை, மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் பலதரப்பட்ட அமைப்புகளின், கல்விநிறுவனங்களின் பங்கேற்பு மிகவும் அவசியமாகின்றது.

சமகால வரலாற்றையும் அது தொடர்பான பிம்பங்களையும் முன்வைப்பதில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்படலாம் என்ற கருத்தைச் சில கல்வி நிறுவனங்கள் எம்மோடு உரையாடுகையில் தெரிவித்துள்ளன.

ஆனால், பொருத்தமான அணுகுமுறைகள் ஊடாக சமகால வரலாற்றை ஒளிவு மறைவின்றி, தயக்கமின்றி முன்வைக்கலாம் என்பதும், அவ்வாறான சட்டச்சிக்கல்களை எந்தத் தரப்பு ஏற்படுத்தினாலும் அவற்றை எதிர்கொண்டு முன்னேறுவதே ஒரு தேசத்தின் போராட்டம் என்பதையும் அவர்களுக்கு எடுத்து விளக்கியுள்ளோம். அதற்கான வழிமுறைகள் சிலவற்றை அவர்களுக்குத் தெரியப்படுத்தியும் உள்ளோம். இந்த வகையில் அனைத்து கல்விநிறுவனங்களுக்கும் பட்டறைகளை நடாத்தவும் முன்வந்துள்ளோம்.

அதுமட்டுமன்றி, எந்தவிதமான சட்டரீதியான சிக்கல்கள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயாரான அறத்துடன் எமது நூலாக்கப் பயணம் முன்னெடுக்கப்படும். தமிழ்நெற் போராட்ட காலத்திலும் அதற்குப் பின்னரும் அந்த அறத்துடனேயே இயங்கிவருகிறது.

சரணாகதி அரசியலுக்கோ, "அபிவிருத்தி" எனப்படும் அரசியலுக்கோ, எமது தேசிய நலனுக்குக் குந்தகமான வகையில் அமையும் இணக்க அரசியலுக்கோ, சமரசங்களுக்கோ வேறு நெருக்கடிகளுக்கோ ஆளாகாத வகையில் நூலாக்கம் நடைபெறுவதும் வெளிப்படைத்தன்மையுடனான நிதியூட்டம் அமைவதும் அவசியமாகிறது.

இந்த அடிப்படையில் உள்ளடக்கத்தை முழுமையான சுயாதீனத்தன்மையுடன் தயாரிப்பது என்றும் குறித்த அமைப்புகளோடு குறைந்தபட்சம் விநியோகத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முடியுமானால் செய்துகொள்வது பொருத்தமாயிருக்கும் என்றும் தீர்மானித்திருக்கிறோம்.

இந்தப் புரிந்துணர்வு, நூலாக்க உள்ளடக்கத்தின் தன்மையை எந்தவகையிலும் பாதிக்காத வகையிலேயே மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே எமது அடிப்படையான கரிசனையாக இருக்கிறது. இதற்கான சில ஆரம்பக் கலந்துரையாடல்களை கடந்த சில நாட்களாக ஒரு சில கல்விநிறுவனங்களுடன் மேற்கொண்டிருந்தோம். நல்லெண்ண ஆதரவுச் சமிக்ஞைகள் சில எமக்குக் கிடைத்துள்ளன.

இந்தப் பெருந்திட்டத்திற்கான நிதிமூலம் சுயாதீனமாகவே திரட்டப்படவேண்டும். உரிய நிறுவனப் பதிவுகளுடனும் சட்டரீதியாகக் கணக்குத் தணிக்கையாளரினால் கண்காணிக்கப்படும் வகையிலான அறக்கட்டளைகள் ஊடாகவுமே நிதித் திரட்டல் மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கான ஒழுங்குகளைத் தற்போது பூர்த்தியாக்கியுள்ளோம். தமிழ்நெற் அறக்கட்டளை, மாற்றுச் செய்திநிறுவன வலைப்பின்னல் அறக்கட்டளை என்பவற்றின் சட்டரீதியான பங்காற்றல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கணிசமான பணிகள் தொண்டுமுறையில் செய்யப்படலாம். எனினும், அவசியமான சில அடிப்படை வேலைகளை நவீன உலகத்தளத்தில் முன்னணியில் இருக்கும் துறைசார்ந்த புலமைத்துவம் கொண்டோரை அணுகி, தொழில் ரீதியாக வரைகலை நுட்பங்கள் மற்றும் சர்வதேச ஒப்பீட்டுத் தரவுகளையும் அவதானிப்புகளையும் கருத்துகளையும் ஆதாரபூர்வமாகப் பெற்றுக்கொள்ளவும், இல்லாதவற்றை உருவாக்கவும் நிதித் தேவை அடிப்படையாகிறது. இந்தப் பெரும்பணிக்கே மக்களிடம் சேர்க்கப்படும் நிதி பயன்படுத்தப்படவேண்டும்.

முதற்கட்டமாக முழுமையான உத்தேச நிதிச்செலவுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்படுவது அவசியம். அந்த உத்தேச நிதிச்செலவுத் திட்டம் முழுமையாக அமைக்கப்பட முன்னதாகவே, குறைந்தபட்சச் செலவு எவ்வாறு இருக்கும் என்பதற்கான கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் நிதிப்பங்களிப்புக் கோரப்படுகிறது.

முழுமையான நிதிச்செலவுத் திட்டம் எதிர்வரும் மாதங்களில் அதற்குரிய திறமையாளர்களின் பங்கேற்புடன் முன்வைக்கப்படும்.

இனி, தொழில்நுட்பத் தகவலோடு மேற்கொள்ளப்பட்டுள்ள குறைந்தபட்சச் செலவு குறித்த தரவுகளை இங்கு தருகிறோம். இது பெருந்திட்டத்தின் கனதியை வெளிப்படுத்துவதாக அமைகிறது என்பது மட்டுமல்ல, இந்த நிதிச் சேகரிப்பு பூர்த்தியாகும் போது வேலைத் திட்டம் விரைவாக நடாத்தப்படுவதும் உறுதியாக்கப்படும்.


உத்தேசமான குறைந்தபட்ச நிதிச் செலவு
குறைந்தது நூறு தரவு-வரைகலைப்படங்களைப் புனைவதற்கு ஒன்றுக்கு இருநூறு டொலர்கள் என்ற அடிப்படையில் இருபதாயிரம் டொலர்கள் வெளி நிபுணர்களுக்கான செலவாகும்.

இதைப்போல வரைபடங்களுக்கு ஐயாயிரம் டொலர்கள் தேவைப்படும். புள்ளிவிபர ஒப்பீட்டு ஆய்வுகளுக்கும் குறைந்தது ஐயாயிரம் டொலர்கள் தேவையாகும்.

ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களின் வடிவமைப்புப் பணிக்குக் குறைந்தது மூவாயிரம் டொலர்கள் தேவைப்படும்.

மொழிபெயர்ப்பு வேலைக்கும் இதைப் போல மூவாயிரம் டொலர்கள் தேவைப்படும்.

அதுமட்டுமல்ல, இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான வரலாற்றியல் அணுகுமுறையை வகுப்பதற்கு மூவாயிரம் டொலர்கள் வரை செலவிடவேண்டியிருக்கும்.

எனவே நாற்பதாயிரம் டொலர்கள் இந்தப் பெருந்திட்டத்துக்குத் தவிர்க்கமுடியாத அடிப்படை நிதித் தேவையாகின்றது.

இதைத் திரட்டும் பணியை உடனடியாக மக்கள் திரட்சி நிதியூட்ட முறை ஒன்றின் ஊடாக ஆரம்பித்திருக்கிறோம்.

பெருந்தொகையிலான நூலாக்கம் என்பது இரண்டாம் பட்சமானது. அதற்குரிய வரவு செலவுத் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டபின்னர் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்படும். இதற்குப் பொதுமக்களின் நிதிப்பங்களிப்புத் தேவை இருக்காது என்று நாம் கருதுகிறோம்.

ஆகவே, ஆய்வுக்குரிய அடிப்படை வேலைகளுக்குரிய நாற்பதாயிரம் அமெரிக்க டொலர்களைப் பரோபகார எண்ணமுள்ளவர்களிடம் உடனடியாகச் சேகரிக்க விழைகிறோம்.


நூலாக்கப் பெருந்திட்டத்தின் உள்ளடக்கம்
ஆதி வரலாறு குறித்த பல ஆய்வுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் சுருக்கமான அடிப்படைகளைச் சரியான முறையில் ஆரம்பத்தில் தொகுத்தளித்துவிட்டு, பதினாறாம் நூற்றாண்டில் இருந்து, ஈழத் தமிழர் தேசத்தின் அரசாட்சியை, அதாவது இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்கிற்கான தமிழ் இறைமையைப் பறித்துக்கொண்ட ஐரோப்பியக் காலனித்துவம் இறுதியில் முழுத்தீவையும் ஈழத் தமிழர் விருப்புக்கு மாறாக ஒற்றையாட்சி ஆக்கியமை எவ்வாறு நடந்தேறியது என்பதையும் அது ஏற்படுத்திய ஆழமான தாக்கங்களையும் இளைய தலைமுறைக்கு விளங்கச்செய்வது ஈழத்தமிழ் வரலாற்று மாணாக்கரின் புரிதலுக்கு அவசியமாகிறது.

ஐரோப்பியக் காலனித்துவத்தைத் தொடர்ந்து, தீவுக்குள் ஈழத்தமிழர் மீது புதியதொரு காலனித்துவமாக சிங்கள தேரவாத பௌத்த மேலாதிக்கம் தலையோங்கியது. அது காலத்தால் நீண்டு செல்லும் நெடியதோர் இன அழிப்பாக முனைப்புப் பெறும்வகையில் அமைந்த அடக்குமுறைகளதும் தாக்குதல்களதும் தொடர்கதையை அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

அவற்றை எதிர்கொண்ட ஈழத்தமிழர் தேசம் அமைதிவழியிலும் ஆயுதப்போராட்ட முறையிலும் அளப்பரிய அர்ப்பணிப்புகளுடன் எவ்வாறு போராடியது என்பதைத் தெளிவாக உணரும் வகையில் எடுத்துரைப்பது அவசியமாகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினதும் அது உருவாக்கிய நடைமுறை அரசினதும் மாண்பும் விழுமியங்களும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் தர்க்கீகமும் முன்வைக்கப்படுவது மிகவும் முக்கியமாகிறது.

அதுமட்டுமல்ல, ஈழத்தமிழர் தேசத்தின் போராட்டத்தில் அவ்வப்போது தலையிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகள் தமது புவிசார் நலன்கள் சார்ந்து மேற்கொண்ட குந்தகமான நடவடிக்கைகளையும், அவற்றுக்குச் சளைக்காது ஈழத்தமிழர் இறைமையைச் சரணாகதியாக்காது முள்ளிவாய்க்கால் வரை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் அறமும் மறமும் ஆழமான புரிதலுக்குரியவை.

அதேபோல, காலனித்துவ, பிராந்திய, சர்வதேசப் பொறுப்புக்கூறல் என்றால் என்ன என்பதும் தெளிவாக முன்வைக்கப்படவேண்டும்.

தொடர்ந்து, பின்முள்ளிவாய்க்காற் காலத்தில் ஈழத்தமிழர் தேசம் எதிர்பார்க்கும் சர்வதேச நீதியை மட்டுமல்ல புதிய வழிகளில் தொடரப்படவேண்டிய தேசக்கட்டலின் கனதியையும் எதிர்காலத் தேசச் சிற்பிகள் தம் மனதில் இருத்தி எண்ணத் தலைப்படல் வேண்டும்.

இவ்வாறு எமது வரலாற்றையும், சமகாலத்தையும் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளையும் எமது இளைய தலைமுறை மட்டுமல்ல, உலக சமுதாயமே அறிந்துகொள்ளும் வகையில் எமது வரலாற்றியல் நவீன முறையில் கட்டமைக்கப்படவேண்டும்.

நிதிக்கு அப்பாற்பட்ட பங்கேற்புகளை உறுதிசெய்வதற்கான வேலைத்திட்டமும் வகுக்கப்பட்டுவருகிறது. ஆர்வமுள்ளோர் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

இப் பெருந்திட்டம் வெற்றியளித்து, இளைய தலைமுறைக்கான பாடநூல் மட்டுமல்ல, ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக் குறித்த சர்வதேச நீதி, மற்றும் தேசியக் கேள்விக்குரிய அரசியல் நீதிக்குமான தகவற் கட்டமைப்புக்குரிய அடிப்படைகளைச் செதுக்கும் இந்த அரும்பணிக்கு அவசியமான நிதியுதவியைப் பரந்துபட்ட புலம் பெயர் மக்கள் தளத்தில் இருந்து விரைவில் எதிர்பார்க்கிறோம்.

நிதிப்பங்களிப்பை மேற்கொள்ள tamilnet.org என்ற இணையத்தளத்தில் அனைத்துவிபரங்களும் தரப்பட்டுள்ளன.

இந்த அறிவித்தலை தமிழ்நெற் ஆசிரியபீடமும் தமிழ் வாதாடு தளமும் இணைந்து 22 ஒக்ரோபர் 2021 அன்று வெளியிடுகின்றன.

image

தமிழ்நெற்றின் நிதி, அதன் சுயாதீனத் தன்மை மற்றும் தமிழ் வாதாடு தளத்தின் உருவாக்கம்


தமிழ்நெற் ஒரு மின்னஞ்சற் பட்டியாக (mailinglist) 1995 நடுப்பகுதியில் நோர்வேயின் பேர்கன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், இணையத்தள செய்தி நிறுவனமாக 1997 ஜூன் மாதம் ஒஸ்லோவில் இருந்து அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்கொட்லான்ட், கனடா போன்ற இடங்களில் இருந்தோரின் துணையுடன் இயங்கலாயிற்று.

1998 ஆம் வருட ஆரம்பத்தில், நோர்வேயின் நீதி அமைச்சின் கீழ் இயங்கிய குடிவரவுத் திணைக்களம் அறிவித்திருந்த குடியேற்றவாசிகளுக்கும் அவர்களின் தாயகத்துக்குமான செய்திப் பரிமாற்றத்துக்கான ஓர் உதவித்திட்டத்தின் கீழ் சுயாதீனமாக நிதியைத் தமிழ்நெற் தேடிப் பெற்றுக்கொண்டது.

எனினும், இரண்டு வருடங்களுக்குள் அந்த நிதியைத் துண்டிக்கும் வகையில் இலங்கை அரசு நோர்வே வெளிவிவகார அமைச்சினூடாக மறைமுக அழுத்தங்களை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து தமிழ்நெற்றுக்கான நிதியூட்டம் முழுமையாகச் சுயாதீனமானதாக, ஆசிரியர் பீடத்தவரின் பொருளாதார முயற்சிகளிலும் பொதுமக்களின் பங்களிப்பிலும் தங்கியிருப்பதாக மாத்திரமே அமையவேண்டும் என்று அதன் ஆசிரியபீடம் முடிவெடுத்துக்கொண்டது.

அமெரிக்காவில் ஆரம்பத்தில் இருந்தே, குறிப்பாக மாமனிதர் சிவராம் அவர்கள் 1997 ஒக்ரோபரில் எம்மோடு இணைய முன்னர் இருந்தே, செயற்பட்டு வந்த மூத்த ஆசிரியர் ஒருவரின் சுயாதீன நிதித் திரட்டலோடு தமிழ்நெற் இயங்கலானது.

அதேவேளை நோர்வேயின் ஒஸ்லோ பல்கலைக்கழக விஞ்ஞானப் பூங்காவில் (Oslo Research Park) ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கி (Everbit Systems Development AS) அது ஈட்டிய வருவாயில் தமிழ்நெற்றின் பல வேலைகள் நடந்தேறின. தமிழ்நெற்றில் தற்போதும் பயன்படுத்தப்படும் உள்ளடக்க முகாமைத்துவ அமைப்பு (Content Management System / CMS) மற்றும் அதன் தொழில்நுட்பத் தளம் அங்கேயே உருவானது. இன்றும் அதே அடிப்படையில், பிரத்தியேக வழங்கியில் (Dedicated Server) அது இயங்கி வருகிறது.

எமது சொந்தத் தொழில் நுட்பம் என்பதால் பாதுகாப்பையும் இறுக்கமாகக் கட்டிக் காக்கமுடிகிறது. இலங்கை அரசு 2007 இல் தமிழ் நெற்றைத் தாக்குவதற்கு வெளி நிறுவனங்களை வாடகைக்கு அமர்த்தவும் தயார் என்று அறிவித்திருந்தது. இதனால் எமது வழங்கியின் மூல இணைய எண் (IP) வெளியில் தெரியாதவாறு Advanced DDoS Mitigation வெளி நிறுவனம் ஒன்றால் வழங்கப்படுகிறது. மேலும், அண்மைய வருடங்களில் மெய் நிகர் முகாமைத்துவத் தளம் (Virtualization Management Platform), முகில் கணின வழங்கியாகவும் (Cloud based VPS) ஒன்றுக்கு மேற்பட்ட மூல இணைய எண்களுடன் தொழில் நுட்பம் ஆசிரியபீடத்தினாலேயே கையாளப்பட்டு வருகிறது. YouTube வீடியோக்களைப் பாதுகாப்பதற்காக, பிரத்தியேகமான வீடியோ தள வழங்கி ஒன்றில் வீடியோக்களை பாதுகாத்தும் வருகிறோம். தற்போது (2021 இல்) பயநிடை (API) நுண்சேவைகள் (Micro services) அடங்கிய தரவமைப்பாக (Data Structure) தமிழ்நெற்றை மாற்றிவருகிறோம்.

இதற்கிடையில் தமிழ்நெற்றையும் குறித்த ஆய்வுப் பூங்காவில் இயங்கிய நிறுவனத்தையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் சில தமிழ்த் தரப்புகள் முன்னெடுத்திருந்தன. ஆனால், அந்த நடவடிக்கைகளால் குறித்த நிறுவனத்தினதோ அல்லது தமிழ்நெற் இணையத்தளத்தினதோ சுயாதீனத்தன்மையைக் கட்டுப்படுத்த முடியாதவாறு பாதுகாக்கவேண்டிய நிலைமை தோன்றியது. குழப்ப நடவடிக்கைக்கு ஆளானவர்களிற் சிலரும் தமது கோரிக்கைகளை, உண்மைநிலை உணர்ந்து, பின்னாளில் கைவிட்டுவிட்டனர்.

இந்த நூற்றாண்டின் முதல் நாளான 01 ஜனவரி 2000 அன்று தமிழ்நெற் ஆசிரிய பீடம் அதன் அறக்கட்டளையில் இருந்து நிர்வாகரீதியாக விடுபட்டு, சிவராம், சிறிதரன், ஜெயச்சந்திரன் ஆகிய ஆசிரியர்கள் மூவரின் பொறுப்பில் சர்வதேச ரீதியாக நிர்வகிக்கப்பட்டது.

சிவராம் அவர்களைத் தமிழ்நெற்றில் இருந்து ஓரங்கட்ட, அல்லது வெளியேற்ற, முன்னெடுக்கப்பட்ட முனைப்புகளை எதிர்கொண்டு தமிழ்நெற் தனது சுயாதீனத் தன்மையைப் பேணுவதில் மிகவும் உறுதியாகச் செயற்படவேண்டி இருந்தது.

இவ்வாறு ஆசிரிய பீடத்தவரின் சுயமுயற்சியிலேயே தமிழ்நெற் தனது மூல நடவடிக்கையின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாத்துவந்தது.

எனினும், ஒஸ்லோ விஞ்ஞானப் பூங்காவில் இயங்கிய நிறுவனத்தை மாமனிதர் சிவராமின் படுகொலைக்குப் பின்னர் நடாத்தமுடியாத நிலை தமிழ்நெற் நிறுவக ஆசிரியருக்கு உருவாகியதால் அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. தமிழ்நெற்றின் நாளாந்தச் செய்திகளைக் கவனிக்கும் வேலைக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டியிருந்தது.

ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருந்த தமிழ்நெற் ஜேர்மன் மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும் வெளியாகவேண்டும் என்ற விருப்பு தமிழ்த் தேசிய மட்டங்களில் பரவலாக முன்வைக்கப்பட்டபோது, செய்திகளின் மொழிபெயர்ப்புக்கு ஐரோப்பாவில் மூவர் தொழில் ரீதியாக வேலைக்கமர்த்தவேண்டிய சூழலில் சில மாதங்கள் தமிழீழ நடைமுறை அரசின் பணிப்பின் பேரில் அதற்குரிய நிதிப் பங்களிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

தவிரவும், 2009 இற்குப் பின்னர் தமிழ்நெற்றின் நிதிச் செலவுகளுக்குச் சிக்கல் ஏற்பட்ட தருணங்களில் சில அமைப்புகள், குறிப்பாக அவற்றில் இருந்த பொறுப்பாளர்கள் முடிவுகளை மேற்கொண்டு, தாமாக முன்வந்து சில நிதிசார்ந்த சிக்கல்களில் இருந்து விடுபட உதவியும் இருந்தார்கள்.

எனினும், எத்தருணத்திலும் எமது மூல நடவடிக்கையான ஆங்கில செய்திச் சேவையின் எந்த ஒரு பணிக்கும் வேறு எங்கிருந்தும் நிதியூட்டம் பெறப்படவில்லை. ஆசிரியபீடத்தில் இருந்தோரின் முயற்சியாலும் பொதுமக்களின் நேரடிப் பங்களிப்பாலும் மட்டுமே சுயாதீனமான முறையில் நிதியூட்டம் செய்யப்பட்டுவந்தது.

காலப் போக்கில் சில அவசியமான முயற்சிகளில் நிதியற்ற சூழலிலும் அகலக் கால் வைத்து செயற்படவேண்டிய நிலை உருவாகியபோது ஆசிரியபீடத்தவர்கள் சுமைதாங்கிகளாக நிதிச் சுமையை சொந்தத் தோள்களில் சுமக்கவேண்டிய நிலையும் உருவாகியது. இதற்காக ஆசிரியபீடத்தவர் தனிப்பட்ட கடன்களைப் பெற வேண்டிய சூழலும் தோன்றியது.

தமிழ்நெற் முன்னெடுக்க விரும்பிய பலகணி எனும் நேர்காணல் முயற்சிக்கு பிரித்தானியாவில் சிலர் பரோபகார மனதோடு உதவினார்கள். கருவிகள் சிலவற்றைக் கொள்வனவு செய்ய முடிந்தாலும், வேலைத்திட்டத்தை முறையாக முன்னெடுப்பதற்குரிய கலையகத்தை அமைத்துக்கொள்வது சாத்தியமற்ற ஒன்றாகியது. இதற்கும் எமது சுயாதீனத் தன்மை பற்றிய நிலைப்பாடே காரணமாகியது.

சுயாதீனத் தன்மையைக் கைவிட்டு சில அமைப்புகளுடன் இயங்கும் தெரிவை மேற்கொண்டிருந்தால் பிரித்தானியாவில் ஓரிடத்தில் எமது கலையகம் உருவாகியிருக்கும். ஆனால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பை நாம் கருத்திற்கொண்டே பின்வாங்கவேண்டியிருந்தது.

பலகணி போன்ற நடவடிக்கைகளில் ஊடக ரீதியாக அகலக் கால் வைத்துச் செயற்படுவதற்கும் அவசியமான முயற்சிகளைத் தொடர்வதற்கும் மட்டுமல்ல, நாளாந்தச் செய்திகளைத் தயாரித்து வெளியிடுவதற்குக் கூட நிதியற்ற சூழல் உருவாகியது. எனினும் எமது சுயாதீன நிதியூட்டல் என்ற விடயத்தில் நாம் எப்போதும் போல மிகவும் தெளிவான நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் உள்ளோம்.

தமிழ்நெற் மீதான பொருளாதாரச் சுமைகளில் இருந்து விடுபட தொலைதூரத்தில் இருக்கும் பரோபகார உள்ளம் கொண்ட ஒருவர் உதவியதால் நிதிசார் நெருக்கடிகளில் இருந்து தமிழ்நெற் விடுபட்ட போதும் பெரும்பணிகள் சிலவற்றைத் தொடரமுடியாமல் பின்வாங்கவேண்டியிருந்தது.

தமிழ்நெற்றின் மூல வேலைக்குரிய நிதி சுயாதீனமானதான முறையில் திரட்டப்படவேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே நாம் கடைப்பிடித்துவரும் பொதுவிதியைக் கைவிடாது நிதியூட்டம் செய்வது மிகவும் சிரமமானதொன்றாகியுள்ளது. ஆசிரியபீடத்தவர்கள் சிலர் நாட்டமிழக்கும் போது அல்லது அவர்களது தனிப்பட்ட வருவாய் பின்னடைவு காணும்போது தமிழ்நெற்றுக்கான நிதியூட்டலும் சிக்கலாகிவிடுகின்றது. அது மட்டுமல்ல பொதுமக்களிடம் சென்று நிதிசேகரிக்கும் திறமையும் ஆசிரியபீடத்தில் மீதமானோருக்கு இருக்கவில்லை.

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2018 இல், எமது கடந்த காலச் செயற்பாடுகளை, குறிப்பாக நிதி தொடர்பான விடயங்களை, முழுமையான ஒரு மீளாய்வுக்கு உட்படுத்தி அதன் பின்னரே தமிழ் வாதாடு தளம் என்ற அணுகுமுறையைச் செயற்படு தளமாக வகுத்துக்கொண்டோம். பொதுவெளியில் இதுவரை வெளிவராதிருந்த தமிழ்நெற்றின் சுயாதீனத் தன்மை குறித்த உண்மைகள் சொல்லப்படவேண்டும் என்பதையும் முடிவெடுத்துக்கொண்டோம்.

தமிழ்நெற் என்ற ஊடக வேலைக்கு அப்பால் பொது முன்னெடுப்புகள் பரவலான பங்களிப்போடும் சுயாதீனத் தன்மையோடும் வேறொரு தளத்தில் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கும் வந்தோம்.

அவ்வாறு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் வேறு அமைப்புகளும் நிதிப் பங்களிப்பை வெளிப்படைத் தன்மையோடு மேற்கொள்ள முடியும். அனைவரும் பிளவுகளைத் தாண்டி ஒருங்கிணைந்து வேலை செய்யும் வாய்ப்பை ஒரு தளமாக உருவாக்கமுடியும்.

இன அழிப்புக்கான சர்வதேச நீதிக்கான பொருத்தமான கோரிக்கைகள், ஆதாரங்கள், நடவடிக்கைகளுக்குரிய சரியான திசையில் ஈழத்தமிழர் தேசத்தை இட்டுச்செல்லும் வழிமுறை அனைத்து வேலைத்திட்டங்களிலும் முதன்மையானது என்ற வகையில் தமிழ் வாதாடு தளத்தின் அணுகுமுறையை வகுத்துக்கொண்டோம்.

அங்கு துடிமத் தளப் பொறிமுறையே பிரதானமாக அடையாளம் காணப்பட்டது.

அறிவைக் கடத்தும் நூலாக்கம் போன்ற பெரும் நிதித் தேவையோடு முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தமிழ்நெற்றால் அடுத்ததாகத் தொடரப்படவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம்.

வழமைபோல தமிழ்நெற் ஆசிரியபீடம் எவ்வித பொருளீட்டும் நோக்கற்றுச் செயற்படும். எமது ஆசிரியர்கள் தமது நேரத்தை மட்டுமல்ல, பொருளாதாரத்தையும் சேர்த்தே தமிழ்நெற்றின் சுயாதீனத் தன்மையைப் பேணிவந்துள்ளார்கள். தொடர்ந்தும் மக்கள் பங்களிப்போடு தமிழ்நெற் தன்னை மீளுருவாக்கம் செய்துகொள்ளும் வகையில் அதற்குரிய நிதித்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில இணையத்தள மற்றும் செய்திநிறுவன வேலைகளுக்கும் அப்பால் நூலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில் அவை தனிவேறான நிதித் திரட்டலோடு நேரடியான மக்கள் பங்களிப்போடு, ஆசிரியபீடத்தில் இருந்து வேறுபட்டு, பொதுப்படையான தன்மையோடு கையாளப்படவேண்டும் என்ற முடிவையும் மேற்கொண்டுள்ளோம்.

இதற்கு தமிழ்நெற் அறக்கட்டளை மற்றும் அதைப்போன்ற பொருளாதார இலாபநோக்கற்ற அறக்கட்டளைகள் வேறேதும் இருப்பின் அவற்றையும் அணுகலாம் என்றும் முடிவுசெய்துள்ளோம்.

2020 இன் இறுதியிலும் 2021 இன் ஆரம்பத்திலும் இரண்டு நூல்வெளியீடுகளை தமிழ்நெற் அமேசனூடாக மிகவும் குறைந்த செலவில் வெளியிட்டது. இது ஒரு முன்னோடி நடவடிக்கையே.

அவற்றில் ஒன்று கையடக்கமான இளைய தலைமுறைக்குரிய ‘தமிழும் ஈழத்தமிழும்’ (Tamil And Eezham Tamil) என்ற ஆங்கில நூலாகும். மறைந்த பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் தமிழ்நெற்றுக்காக எழுதிய அறிமுகம் ஒன்றே சிறிய கைநூலாக வெளியாகியது.

அதைப் போல, ‘தமிழ்த் தேசத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும்’ (The Fall and Rise of the Tamil Nation) என்ற ஆங்கில நூலின் மறுபதிப்பு தகுந்த உரிமை பெற்று உரிய பின்னிணைப்புகளின் சேர்ப்போடு வெளியிடப்பட்டது. தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழர் சுயாட்சிக்கழகத்தை ஆரம்பித்து தமிழ் இறைமைச் சிந்தனைப் பள்ளியின் முன்னோடியாகிய வ. நவரத்தினம் அவர்கள் எழுதிய நூலே அதுவாகும்.

இவற்றை அமேசனில் அனைவரும் பெற்றுக்கொள்ளலாம்.

அதைப்போல வேறு ஒரு தொகுப்பை தமிழ்நெற் அறக்கட்டளை, மாற்றுச் செய்திநிறுவன வலையமைப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ் வாதாடு தளம் இணைந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகவும் குறைந்த செலவில் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளோம். இவற்றுக்கான நிதிச்செலவை சில பரோபகார நல்லெண்ணம் கொண்டவர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள்.

செய்தி, நூலாக்கம், மற்றும் கருத்து நிறுவனமான தமிழ்நெற்றுக்கு அப்பாற்பட்ட பொதுவான செயற்பாடுகளில் வேறு சில அமைப்புகளும் தேவைக்கேற்ப இணைந்து செயற்படும் வகையில் தமிழ் வாதாடு தளத்தின் ஊடாக வெளிப்படைத் தன்மையோடு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது சிறப்பாக அமைந்துள்ளது. இன அழிப்பு நீதிக்கான துடிமத்தள உருவாக்கத்தையும் வேறு பல வேலைத்திட்டங்களையும் பரவலான பங்கேற்புடன் தமிழ் வாதாடு தளம் முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டது என்பது மன நிறைவு தரும் செய்தி.